×

அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

* சவரனுக்கு ரூ.480 குறைந்ததால் மகிழ்ச்சி
* வழக்கத்தை விட 30% விற்பனை அதிகரிப்பு

சென்னை: அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் நகைக்கடைகளில் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். நகை விலை சவரனுக்கு ரூ.480 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் அட்சயதிரிதியை முன்னிட்டு வழக்கமான நாளை விட 30% வரை விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம். மேலும், இந்த நாள் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திரிதியையில் ‘குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும்’ என்ற எண்ணம், மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது. இதன்படி இந்தாண்டு அட்சய திரிதியை நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை 7.49 மணிக்கு அட்சயதிரிதியை தொடங்கியது. இது இன்று காலை 7.47 மணி வரை நீடிக்கிறது. அதே நேரத்தில் நேற்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இதனால் அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் அனைத்தும் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.

சென்னையை பொறுத்தவரை நகைக்கடைகள் அதிகமாக உள்ள தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை, போரூர், பாடி உள்ளிட்ட பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அட்சய திரிதியைக்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களுக்கு பல கடைகளில் தங்க நகைகள், நாணயங்களுக்கு செய்கூலி கிடையாது. கிராமுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை வரை தள்ளுபடி. முன்பதிவு செய்யும் போது என்ன விலை விற்றதோ, அந்த விலைக்கு தங்கம் விற்பனை, தங்க நகை வாங்குபவர்களுக்கு வீடுகளுக்கே வந்து அழைத்து செல்ல வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அட்சயதிருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் விற்பனைக்காக வந்திருந்தது. எடை குறைவான நெக்லஸ், பேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் உள்பட பலவிதமான நகைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில், தங்களுக்கு பிடித்த நகைகளை மக்கள் தேர்வு செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக டெம்பிள் ஜூவல்லர்ஸ் நகைக்கு அதிக கிராக்கி இருந்தது. இதனால், ஏராளமானோர் போட்டி போட்டு நகை வாங்க முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் நேற்று காலை முதல் வந்து நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பொதுமக்களும் நகைகளை ஆர்வமுடன் நகை வாங்கிய காட்சியை காண முடிந்தது. குறிப்பாக தங்க நாணயங்களையும் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

வழக்கமாக அட்சய திரிதியை அன்று தங்கம் விலை அதிகரிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.5605க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.44840க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைவு, அட்சய திரிதியை முன்னிட்டு விற்பனை அதிகமாக காணப்பட்டது. மாலையில் மேலும் கூட்டம் அதிகரித்தது. கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நள்ளிரவிலும் கடைகளில் விற்பனை நடந்ததை காணமுடிந்தது.

இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தங்கம் விற்பனை 20% முதல் 30% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ” என்றார். கடந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு சுமார் ரூ.10,000 கோடி வரை நகை விற்பனையாகியிருக்கலாம் என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Akshaya Trithi ,Tamil Nadu ,Sawaran ,Chennai ,Aksaya Triti ,
× RELATED அட்சய திரிதியை வரும் 10ம் தேதி...